குஷ்பு-காயத்ரி ரகுராம் டுவிட்டரில் மோதல்


குஷ்பு-காயத்ரி ரகுராம் டுவிட்டரில் மோதல்
x
தினத்தந்தி 27 Jun 2019 10:30 PM GMT (Updated: 27 Jun 2019 6:52 PM GMT)

நடிகைகள் குஷ்புவும், காயத்ரி ரகுராமும் டுவிட்டரில் மோதிக்கொண்டனர்.

நடிகைகள் குஷ்புவும், காயத்ரி ரகுராமும் அரசியல் சமூக விஷயங்களை டுவிட்டரில் தொடர்ந்து பதிவிடுகின்றனர். விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் திருடியதாக 22 வயது மதிக்கத்தக்க இளைஞரை சிலர் பிடித்து ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தி தாக்கியதாக சர்ச்சை எழுந்தது.

அந்த இளைஞரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்துபோனார். ஜெய்ஸ்ரீராம் சொல்லும்படி வற்புறுத்திய வீடியோவை சிலர் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கினர். குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் “ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி ஒரு இளைஞரை கொன்று விட்டனர். இதுதான் புதிய இந்தியாவா?” என்று ஆவேசப்பட்டார்.

குஷ்புவுக்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம், “இந்துக்களை கொலைகாரர்கள் போல் பார்ப்பது டிரெண்டாகி விட்டது. மற்ற மதத்தினர் இதுபோல் தவறு செய்யும்போது குஷ்பு வாய் திறப்பதில்லையே” என்றார்.

இதற்கு பதில் அளித்துள்ள குஷ்பு, “உங்களை போன்றவர்களுடன் விவாதம் செய்ய நான் தயாராக இல்லை. உங்கள் உறவினர்கள் மீது மரியாதை வைத்து இருக்கிறேன். எனவே வாயை பொத்திக்கொண்டு இருக்கவும்” என்றார். இதற்கு மீண்டும் பதில் அளித்த காயத்ரி ரகுராம், “நீங்கள் என் மதத்தை இழிவு செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மீது பகை இல்லை” என்று கூறினார். குஷ்பு-காயத்ரி ரகுராமின் மோதல் வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story