ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் சூர்யா படத்தில் வைரமுத்து பாடல்கள்


ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் சூர்யா படத்தில் வைரமுத்து பாடல்கள்
x
தினத்தந்தி 28 Jun 2019 12:20 PM GMT (Updated: 28 Jun 2019 12:20 PM GMT)

சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘காப்பான்.’ லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் டைரக்டு செய்கிறார்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாய்ஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

தீவிரவாதத்தில் இருந்து இந்தியாவையும், இந்திய பிரதமரையும் பாதுகாக்கும் அதிரடி படமாக, ‘காப்பான்’ தயாராகி வருகிறது. இந்திய பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்து இருக்கிறார். பிரதமர் காஷ்மீரில் கலந்து கொள்ளும் ஒரு விழாவில் பள்ளிக் குழந்தைகள் பாடும் தேசிய பாடல் ஒன்று வேண்டும் என்று கே.வி.ஆனந்த் கவிஞர் வைரமுத்துவை அணுகினார்.

கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் இந்த பாடல் நவீன இந்தியாவின் குரலை எதிரொலிப்பதாக அமைந்து இருக்கிறது என்று டைரக்டர் கே.வி.ஆனந்த் கூறுகிறார். பாடலை படமாக்கி முடிப்பதற்குள் படத்தில் நடித்த குழந்தைகள் அனைவரும் வரிகளை மனப்பாடமாகவே பாட ஆரம்பித்து விட்டார்கள். தமிழில், ஒரு தேசிய கீதம் என்று பெற்றோர்கள் பாராட்டினார்களாம். அந்த பாடல் வரிகள்:-

‘‘விண்ணில் விண்மீன் ஆயிரம்; வானம் ஒன்று மண்ணில் பூக்கள் ஆயிரம்; பூமி ஒன்று பாஷை இங்கே ஆயிரம்; தேசம் ஒன்று பண்பாடிங்கே ஆயிரம்; வாழ்க்கை ஒன்று உடல் நிறம் மாறலாம் உயிர் நிறம் ஒன்றுதான் நம் ஈஸ்வர் அல்லா தேவன் எல்லாம் ஒன்றுதான் ஒற்றை தேசமென்றும் ஒற்றை வாழ்க்கையென்றும் யார் நினைத்தாலும் திணித்தாலும் நிறைவேறுமா? பல வண்ணங்களால் செய்த ஓவியம் போல் ஒரு நிறம் கொண்ட படம் என்றும் அழகாகுமா? வேற்றுமையில் அழகியல் உண்டு வேற்றுமையில் ஒற்றுமை நன்று இந்தியாவின் பொதுப்பண்பு இயற்கை வகுத்தது...’’

Next Story