ஆஸ்கார் விருது தேர்வு குழுவில் அனுபம் கெர், அனுராக் காஷ்யப்


ஆஸ்கார் விருது தேர்வு குழுவில் அனுபம் கெர், அனுராக் காஷ்யப்
x
தினத்தந்தி 3 July 2019 11:30 PM GMT (Updated: 3 July 2019 5:31 PM GMT)

ஆஸ்கார் விருதுக்கு தகுதியான படங்களையும், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்யும் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன.

ஆஸ்கார் தேர்வு குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் இதைத்தொடர்ந்து நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்த ஆண்டு நடக்கும் ஆஸ்கார் விருது தேர்வு குழுவில் 59 நாடுகளில் இருந்து 842 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் 21 பேர் ஆஸ்கார் விருது பெற்றவர்கள். 82 பேர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள். இந்தியாவில் இருந்து நடிகர் அனுபம் கெர், இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அனுபம் கெர் பிரபல இந்தி நடிகர் ஆவார். தமிழில் வி.ஐ.பி., லிட்டில் ஜான், குற்றப்பத்திரிகை ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர்களை தேர்வு செய்யும் ஆஸ்கார் விருது குழுவில் இவரை நியமித்து உள்ளனர். அனுராக் காஷ்யப் இந்தி பட உலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக வந்தார்.

இவரை குறும்படம் மற்றும் அனிமேஷன் பட பிரிவில் நியமித்து உள்ளனர். ஜோயா அக்தர் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தரின் மகள். இவரை இயக்குனர்களுக்கான பிரிவில் நியமித்து உள்ளனர். இந்திய பட உலகை சேர்ந்த மேலும் சிலரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் விருதுக்கானவர்களை வாக்களித்து தேர்வு செய்வார்கள். 

Next Story