வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!


வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
x
தினத்தந்தி 5 July 2019 11:38 AM GMT (Updated: 5 July 2019 11:38 AM GMT)

ஜெய் ஆகாஷ் நடித்துள்ள புதிய படத்துக்கு, `சென்னை டூ பாங்காக்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ராமகிருஷ்ணா படத்தில் கதாநாயகனாக நடித்தவர், ஜெய் ஆகாஷ். இவர் அடுத்து நடித்துள்ள புதிய படத்துக்கு, `சென்னை டூ பாங்காக்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் ஜெய் ஆகாஷ் ரகசிய போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடிகளாக சோனி சரிஸ்டா, யாழினி, சந்தோஷி, செர்ரி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

இவர்களுடன் யோகி பாபு, சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், `கும்கி’ அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். சதீஷ், சந்தோஷ் ஆகிய இருவரும் டைரக்டு செய்து இருக்கிறார்கள். படத்தை பற்றி இவர்கள் இருவரும் கூறியதாவது:-

``இந்தியாவில் இருந்து பாங்காக்குக்கு கடத்தப்படும் பெண்களை மீட்க ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி புறப்படுகிறார். அங்கே சென்றதும் அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைக்கிறது. கடத்தப்பட்ட பெண்கள் அனைவருக்கும் பயங்கரவாத பயிற்சி அளித்து, மீண்டும் இந்தியாவுக்கே நாச வேலைகள் செய்ய தயார்படுத்துகிறார்கள்.

அவர்களின் சதியை அந்த போலீஸ் அதிகாரி எப்படி முறியடித்து, கடத்தப்பட்ட பெண்களை இந்தியாவுக்கு எப்படி மீட்டு வருகிறார்? என்பதுதான் படத்தின் கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் உள்ளன. இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளிலும், சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம்.’’

Next Story