கணவர் மாயமானதாக போலி விளம்பரம் : நடிகை ஆஷா சரத் மீது நடவடிக்கை?


கணவர் மாயமானதாக போலி விளம்பரம் : நடிகை ஆஷா சரத் மீது நடவடிக்கை?
x
தினத்தந்தி 5 July 2019 11:45 PM GMT (Updated: 5 July 2019 6:04 PM GMT)

கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஆஷா சரத் நடித்துள்ள ‘எவிடே’ என்ற மலையாள படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. இந்தநிலையில் ஆஷா சரத் தனது முகநூல் பக்கத்தில் மேக்கப் போடாமல் சோகத்தோடு ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் தனது கணவரை சில நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடிப்பவர்கள் கட்டப்பனை போலீசில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோவின் கீழே இது ‘எவிடே’ படத்துக்கான விளம்பரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த வாசகத்தை பலரும் கவனிக்கவில்லை.

ஆஷா சரத் பேசியது உண்மை என்று அவர்கள் நம்பினார்கள். இந்த வீடியோவுக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவருக்கு எதிராக போலீசில் புகார்கள் குவிகின்றன. ஆஷா சரத்தை முகநூலில் 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அவர்களில் பலர் ஆஷா சரத் வீடியோவை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டு உள்ளனர்.

மஜித் என்பவர் இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த புகாரில் ஆஷா சரத்தின் வீடியோ தவறான முன் உதாரணத்தையும், மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள்.

Next Story