சரண் டைரக்‌ஷனில் காது கேட்காத-வாய் பேசாத அம்மா வேடத்தில், ரோகிணி!


சரண் டைரக்‌ஷனில் காது கேட்காத-வாய் பேசாத அம்மா வேடத்தில், ரோகிணி!
x
தினத்தந்தி 12 July 2019 11:17 AM GMT (Updated: 12 July 2019 11:17 AM GMT)

காது கேட்காத-வாய் பேச முடியாத அம்மா வேடத்தில் ரோகிணி நடிக்கிறார்.

தமிழ் பட உலகில், சிறந்த நடிப்பாற்றலை கொண்ட நடிகைகளில் ரோகிணியும் ஒருவர். இவர் இப்போது, சரண் டைரக்டு செய்யும் `மார்க்கெட்ராஜா எம்.பி.பி.எஸ்.' படத்தில் நடித்து வருகிறார். காது கேட்காத-வாய் பேச முடியாத `லதாம்மா' என்ற அம்மா வேடத்தில் அவர் வருகிறார். இதுபற்றி டைரக்டர் சரண் கூறியதாவது:-

``ரோகிணியிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில், அவர் 'லதாம்மா' கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். அவருடனான உரையாடல், காட்சி விவரங்களை கூட, சைகை மொழியிலேயே பேசி, ஆச்சரியப்படுத்தினார். படப்பிடிப்பின்போது, அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை எங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போதும் காட்சி முடிந்தவுடன் கூட, அவர் அதில் இருந்து சகஜநிலைக்கு திரும்ப பல மணி நேரம் பிடித்தது. படத்தை திரையில் பார்க்கும்போது, பார்வையாளர்கள் அதேவிதமான உணர்ச்சிக்கு ஆட்படுவார்கள்.

இந்த படத்தில் கதாநாயகனாக ஆரவ் நடிக்கிறார். பட்டாளம் சுந்தரிபாய் என்ற பெண் தாதாவாக ராதிகா சரத்குமார் நடிக்கிறார். புதுமுகம் விஹான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தேவதர்சினி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.''

Next Story