அருண் விஜய் நடிக்க மாறுபட்ட கதைக்களத்துடன், `மாபியா'


அருண் விஜய் நடிக்க மாறுபட்ட கதைக்களத்துடன், `மாபியா
x
தினத்தந்தி 12 July 2019 12:27 PM GMT (Updated: 12 July 2019 12:27 PM GMT)

கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக உடற்கட்டை மாற்றிக் கொள்ளும் அருண் விஜய், இப்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், `மாபியா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

`மாபியா' படத்தை கார்த்திக் நரேன் டைரக்டு செய்கிறார். மிரட்டலான அவருடைய முதல் தோற்றம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து இருக்கிறது.

`மாபியா' பற்றி டைரக்டர் கார்த்திக் நரேன் சொல்கிறார்:-

``படத்தின் திரைக்கதையை தயாரித்தபோதே இந்த படத்துக்கு அருண் விஜய்தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. `தடம்' படத்தி பார்த்த பிறகு அந்த நம்பிக்கை மேலும் உறுதியானது. 37 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பல பெரிய படங்களை தயாரித்து வந்தாலும், எங்கள் படத்தில் எந்த தலையீடும் செய்யவில்லை. எனக்கு முழு சுதந்திரம் அளித்தார்கள். அது எனக்கு பெரிய பொறுப்பை உணர்த்தி இருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை திரைக்கு கொண்டு வரவேண்டும் என்ற உந்துதலை கொடுத்துள்ளது'' என்றார்.

அவரிடம், ``இந்த படத்தில் அருண் விஜய் கடத்தல் கும்பல் தலைவனாக நடிக்கிறாரா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து கார்த்திக் நரேன் கூறியதாவது:-

``இது, வட சென்னை கதையல்ல. `மாபியா' முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தை கொண்ட படம். அருண் விஜய் கடத்தல் கும்பலின் தலைவராக நடிக்கவில்லை. படத்தில், பிரசன்னா மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பிரியா பவானி சங்கரும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் வருவார்.''

Next Story