தியேட்டருக்கு போகாதீர்கள் என்று தடுக்க வேண்டாம் “படத்தின் வெற்றி - தோல்வியை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும்” பட அதிபர் டி.சிவா பேச்சு


தியேட்டருக்கு போகாதீர்கள் என்று தடுக்க வேண்டாம் “படத்தின் வெற்றி - தோல்வியை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும்” பட அதிபர் டி.சிவா பேச்சு
x
தினத்தந்தி 15 July 2019 10:15 PM GMT (Updated: 15 July 2019 8:20 PM GMT)

படத்தின் வெற்றி தோல்வியை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும் என்று பட அதிபர் டி.சிவா பேசினார்.

டைரக்டர் அருண் கார்த்திக் இயக்கத்தில், துருவா-இந்துஜா ஜோடியாக நடித்து, லிப்ரா ரவீந்திரன் தயாரித்துள்ள படம், ‘சூப்பர் டூப்பர்’. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், பட அதிபர் டி.சிவா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“பட தயாரிப்பாளர்கள் விமர்சனத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை இங்கே உறுதியாக கூறுகிறேன். தயாரிப்பாளர்கள் விமர்சனங்களை எதிர்ப்பதில்லை. தரக்குறைவான விமர்சனங்களைத்தான் எதிர்க்கிறோம். மோசமாக விமர்சனங்கள் செய்த படங்களும் ஓடி இருக்கின்றன. விமர்சனங்கள் நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும்.

அதற்கு வரம்பு உண்டு. அந்த எல்லை மீறி போகக்கூடாது. என்ன படம் எடுத்திருக்கிறார்? தியேட்டருக்கு போகாதீர்கள் என்று கேவலமாக பேசக்கூடாது. தி.நகரில் ஒரு கடை வாசலில் நின்று கொண்டு, “அந்த கடையில் பொருள் வாங்காதே... எதுவும் எடுக்காதே என்று கூறினால், அவர் அந்த நேரம் எந்த சட்டை போட்டு இருந்தாலும் அதைக் கிழித்து விடுவார்கள்.

சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல. படத்தின் வெற்றி-தோல்வியை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். முதல் நாள், முதல் காட்சியே வெற்றி பெறுவதில்லை. ரசிகர்கள் படம் பார்க்க அவகாசம் கொடுங்கள்.

விமர்சனங்களால் ஓடிய படம் நிறைய உண்டு. நல்ல விமர்சனங்களால் ஓடாத படங்களும் உண்டு. விமர்சனங்கள் என்ற பெயரில், சிலர் செய்யும் வேண்டாத செயல்களால் வருத்தப்படுகிறோம். இது, எல்லை மீறி சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்.”

இவ்வாறு டி.சிவா பேசினார்.

விழாவில் பட அதிபர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், லிப்ரா ரவீந்திரன், படத்தின் கதாநாயகன் துருவா, கதாநாயகி இந்துஜா, டைரக்டர் அருண் கார்த்திக், இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

Next Story