வன்முறையை தூண்டுவதாக நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு


வன்முறையை தூண்டுவதாக நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 July 2019 10:45 PM GMT (Updated: 15 July 2019 8:29 PM GMT)

நடிகர் சூர்யா வன்முறையை தூண்டுவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார். பஸ் வசதி இல்லாத கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்படும் என்றும், படிப்பை அவர்கள் பாதியில் நிறுத்திவிடும் நிலைமை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் வசதிகள் குறைவாக உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால் கல்வி தரம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக இல்லை. இதுபோன்ற குறைபாடுகளை களையாமல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் அரசு கவனம் செலுத்துவதாகவும் கண்டித்தார்.

வெளிநாட்டில் 8-வது வகுப்பு வரை தேர்வுகளே கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டினார். புதிய கல்வி கொள்கையை எதிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சமூக அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். சூர்யா பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில் சூர்யா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் தரம் மேம்படும் என்றும் வலைத்தளத்தில் சிலர் பேசிவருகிறார்கள். சூர்யாவின் பேச்சுகள் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பா.ஜனதா பிரமுகர் எச்.ராஜா கண்டித்துள்ளார்.

Next Story