ரஜினிகாந்த் ஏற்பாட்டில் குடிநீர் சப்ளை


ரஜினிகாந்த் ஏற்பாட்டில் குடிநீர் சப்ளை
x
தினத்தந்தி 15 July 2019 11:30 PM GMT (Updated: 15 July 2019 8:44 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதற்கு அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நியமனத்தை முடித்து உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது நோக்கமாக இருப்பதால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒதுங்கி இருந்தார்.

இந்த வருடம் இறுதியில் கட்சி பெயரை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடந்து வருகிறது. அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தெரிகிறது. பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் பணியில் தனது அமைப்பினரை ரஜினி இறக்கி விட்டுள்ளார். தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு லாரிகளில் குடிநீரை அனுப்பி வைத்து வினியோகம் செய்கிறார். பயன் அடைந்த பொதுமக்கள் ரஜினியை பாராட்டுகிறார்கள்.

நதிநீர் இணைப்பு திட்டத்துக்கும் ரஜினிகாந்த் குரல் கொடுத்து வருகிறார். தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஏரி, குளங்களை சீர்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர். ரஜினிகாந்தும் தனது அமைப்பை சேர்ந்தவர்களை இதில் இறக்கி விட்டுள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் தமிழகம் முழுவதும் சிறிய ஏரி, குளங்களை தூர்வாரும் பணியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story