‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பது பெருமை - ஐஸ்வர்யாராய்


‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பது பெருமை - ஐஸ்வர்யாராய்
x
தினத்தந்தி 25 July 2019 11:00 PM GMT (Updated: 25 July 2019 6:55 PM GMT)

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டு உள்ளார்.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தியில் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கவும் பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவனமும் லைகா புரொடக்‌ஷனும் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் மணிரத்னம் தரப்பில் இருந்து படம் சம்பந்தமாக இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் பேசும்போது, பொன்னியின் செல்வன் படம் தயாராகும் தகவலை வெளியிட்டதுடன் அதில் நடிக்கும் கதாபாத்திரங்களை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறினார்.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யாராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறும்போது, “பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. மணிரத்னம் படத்தில் பணியாற்றுவதை பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.

Next Story