தனுசின் ‘பவர் பாண்டி’ 2-ம் பாகம்


தனுசின் ‘பவர் பாண்டி’ 2-ம் பாகம்
x
தினத்தந்தி 25 July 2019 11:45 PM GMT (Updated: 25 July 2019 7:22 PM GMT)

தனுஷ் நடிப்பில் மாரி 2-ம் பாகம் படம் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

மஞ்சு வாரியர் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தை அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பவர் பாண்டி 2-ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக தனுஷ் அறிவித்து உள்ளார். 

பவர் பாண்டி படம் 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தை தனுஷ் இயக்கியதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். ராஜ்கிரண், ரேவதி ஆகியோரும் நடித்து இருந்தனர்.

தற்போது இந்த படத்தின் 2-ம் பாகத்தையும் தனுசே இயக்குவார் என்று தெரிகிறது. இதில் ராஜ்கிரணும் ரேவதியும் நடிப்பார்களா? என்பது தெரியவில்லை. ஏற்கனவே தனுசின் வேலை இல்லா பட்டதாரி 2-ம் பாகம் வெளியானது. இதன் முதல் பாகத்தை வேல்ராஜும் 2-ம் பாகத்தை சவுந்தர்யாவும் இயக்கி இருந்தனர்.

வடசென்னை படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் முயற்சியிலும் வெற்றிமாறன் ஈடுபட்டு உள்ளார். அசுரன் படம் முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை 2-ம் பாகம் எடுக்கவும் திட்டம் உள்ளது.

Next Story