பஸ்சில் பெண்களை உரசியதாக பேச்சு நடிகர் சரவணனை சாடிய சின்மயி


பஸ்சில் பெண்களை உரசியதாக பேச்சு நடிகர் சரவணனை சாடிய சின்மயி
x
தினத்தந்தி 28 July 2019 10:02 PM GMT (Updated: 28 July 2019 10:02 PM GMT)

கமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி சர்ச்சைகளால் பரபரப்பாகி இருக்கிறது.

இதில் பங்கேற்ற நடிகை வனிதா ஏற்கனவே தொழில் அதிபர் ஆனந்தராஜை மணந்து விவாகரத்து செய்தவர். தனது குழந்தையை வனிதா கடத்திவிட்டதாக ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிக்பாஸ் அரங்குக்குள் சென்று விசாரணை நடத்திய சம்பவம் நடந்தது.

பின்னர் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் கூறும்போது தனியாக வாழும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றார். இதுபோல் நடிகை மீரா மிதுன் மீதும் புகார் கூறப்பட்டது. பிக்பாஸ் அரங்கில் டைரக்டர் சேரனை சக போட்டியாளர்கள் அவமதிப்பதாகவும் வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் நடிகர் சரவணன் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். பிக்பாஸ் அரங்கில் நடிகர் சரவணன் பேசும்போது, “நான் பஸ்சில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்து இருக்கிறேன்” என்றார். இதை கேட்டு பார்வையாளர்கள் கைதட்டினார்கள்.

இந்த வீடியோவை பார்த்து சரவணனை சின்மயி டுவிட்டரில் கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, “பெண்களை பலவந்தம் செய்வதற்காக நான் பஸ்சில் பயணம் செய்தேன் என்பதை ஒளிபரப்பு செய்கின்றனர். இது பார்வையாளர்களுக்கும், பெண்களுக்கும் நகைச்சுவையாக தெரிகிறது. அவர் பேசியது கேவலமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Next Story