“எனக்கு கிடைத்த ஜாக்பாட் ஜோதிகா” நடிகர் சூர்யா பேச்சு


“எனக்கு கிடைத்த ஜாக்பாட் ஜோதிகா” நடிகர் சூர்யா பேச்சு
x
தினத்தந்தி 28 July 2019 10:05 PM GMT (Updated: 28 July 2019 10:05 PM GMT)

ஜோதிகா, ரேவதி, நான் கடவுள் ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள புதிய படம் ஜாக்பாட்.

புதிய படம் "ஜாக்பாட் " கல்யாண் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது:-

“ஜோதிகா எனக்கு கிடைத்த ஜாக்பாட். திருமணத்துக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு பலமுறை யோசிப்பார். இந்த கதாபாத்திரத்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்று அதில் நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார். நடிக்க முடிவு செய்த பிறகு அவருடைய ஈடுபாடு முழு அளவில் இருக்கும்.

ஜாக்பாட் படத்தில் ஜோதிகாவின் சிலம்ப சண்டையை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இந்த சிலம்ப சண்டைக்காக தினமும் 2 மணிநேரம் ஆறு மாதங்கள் சிலம்ப பயிற்சி பெற்றார். குழந்தைகள் தியா, தேவ் ஆகியோரை குளிக்க வைப்பது, சாப்பிட வைப்பது என்று அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு செல்வார்.

3 மணிநேரம் நடனப்பயிற்சி, 2 மணிநேரம் சிலம்ப பயிற்சி கற்றுக்கொண்டார். எனது தொழிலில் நான் இன்னும் எவ்வளவு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை ஜோதிகாவிடம் இருந்து மீண்டும் கற்றுக்கொண்டேன். சமூகம் மற்றும் பெண்கள் சம்பந்தமாக அவர் உணர்ந்த, புரிந்த விஷயங்கள் எனக்கு இல்லை.” இவ்வாறு சூர்யா பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர்கள் கற்பூர சுந்தரபாண்டியன், சக்திவேல், இயக்குனர் கல்யாண், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

Next Story