பஸ்சில் பெண்களை உரசியதாக சர்ச்சை பேச்சு நடிகர் சரவணன் மன்னிப்பு கேட்டார்


பஸ்சில் பெண்களை உரசியதாக சர்ச்சை பேச்சு நடிகர் சரவணன் மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 30 July 2019 9:55 PM GMT (Updated: 30 July 2019 9:55 PM GMT)

கமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்படுகின்றன. பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் நடிகர் சரவணனும் புதிய சர்ச்சையில் சிக்கினார்.

கமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்படுகின்றன. இதில் பங்கேற்ற நடிகை வனிதா குழந்தையை கடத்திய புகாரில் சிக்கினார். போலீசார் பிக்பாஸ் அரங்குக்குள் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதுபோல் நடிகை மீராமிதுனிடமும் மோசடி புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர். அவரையும் பிக்பாஸில் இருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் நடிகர் சரவணனும் புதிய சர்ச்சையில் சிக்கினார். பிக்பாஸ் அரங்கில் அவர் பேசும்போது, “நான் பஸ்சில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்து இருக்கிறேன்” என்றார். இதை கேட்டு பார்வையாளர்கள் கைதட்டினர். இதனை பாடகி சின்மயி கண்டித்தார். அவர் கூறும்போது, “பெண்களை பலவந்தம் செய்வதற்காக பஸ்சில் பயணம் செய்தேன் என்று சொன்னதை ஒளிபரப்பு செய்கின்றனர். பேருந்தில் குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகின்றனர். அந்த கஷ்டம் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். அவர் பேசியது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக தெரிகிறது. இது கேவலமானது” என்றார்.

நடிகை வனிதாவும் “சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்க தகுதி இல்லாதவர். அவரை வெளியேற்ற வேண்டும் என்றார். மேலும் பலர் சரவணனை கண்டித்தனர்.

இதைத்தொடர்ந்து சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவித்தார். “தன்னைப்போல் யாரும் தவறு செய்யக்கூடாது. நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Next Story