சமூக வலைத்தளத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் கடும் மோதல்


சமூக வலைத்தளத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் கடும் மோதல்
x
தினத்தந்தி 30 July 2019 10:13 PM GMT (Updated: 30 July 2019 10:13 PM GMT)

விஜய், அஜித்குமார் இடையே நட்பு நிலவுகிறது. ஆனால் இருவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் நடக்கின்றன.

அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’, விஜய்யின் ‘பிகில்’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருப்பதால் இரண்டு பேரின் ரசிகர்கள் இடையே தற்போது கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

விஜய் ரசிகர்கள் அஜித் படத்துக்கு எதிராகவும், அஜித் ரசிகர்கள் விஜய் படத்துக்கு எதிராகவும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள். இவர்கள் மோதிக்கொள்வது கவலை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்கள் சண்டையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மோதல் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறும்போது, “சீரற்ற பருவநிலையால் பல இடங்களில் இயற்கை பேரிடர் நடக்கிறது. வறட்சி நிலவுகிறது. குற்ற சம்பவங்களும் நடக்கின்றன. ஆனால் நமது இளைஞர்கள் விஜய், அஜித் குறித்து தேவையில்லாத விஷயங்களை டிரெண்டாக்கி வருகிறார்கள். ஆக்கப்பூர்வமான காரியங்களை அவர்கள் செய்யலாமே” என்று கூறினார்.

இதுபோல் நடிகை கஸ்தூரியும், “விஜய், அஜித் ரசிகர்கள் மோதலை கைவிட்டு நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும்” என்றார்.

அஸ்வின் கருத்தை பலரும் ஆதரித்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக விஜய் ரசிகர்கள் தங்கள் செயலுக்கு சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்களும் மனம் மாறி விஜய்யை வாழ்த்தி புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

Next Story