பஸ்சில் பெண்களை உரசிய சர்ச்சை பிக்பாஸில் இருந்து சரவணன் வெளியேற்றம்


பஸ்சில் பெண்களை உரசிய சர்ச்சை பிக்பாஸில் இருந்து சரவணன் வெளியேற்றம்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:30 PM GMT (Updated: 6 Aug 2019 5:37 PM GMT)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டு உள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் வனிதா, மீராமிதுன் ஆகியோர் போலீஸ் விசாரணை நடவடிக்கையில்  சிக்கியதால் வெளியேற்றப்பட்டனர். இப்போது நடிகர் சரவணன் பெண்களை அவமரியாதை செய்ததாக நீக்கப்பட்டு உள்ளார். சரவணன் கல்லூரி வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஜாலியாக பேசினார்.

அவர் கூறும்போது, “நான் பஸ்சில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்து இருக்கிறேன்” என்றார். இந்த பேச்சு பெரிய சர்ச்சையானது. சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. பெண்களை அவமதிக்கும் வகையில் சரவணன் பேச்சுகள் உள்ளன என்று கண்டித்தனர்.

பாடகி சின்மயி டுவிட்டரில், “பெண்களை பலவந்தம் செய்வதற்காக நான் பஸ்சில் பயணம் செய்தேன் என்கிறார். இது பார்வையாளர்களுக்கும், பெண்களுக்கும் நகைச்சுவையாக தெரிகிறது. அவர் பேசியது கேவலமாக இருக்கிறது” என்றார். எதிர்ப்புகள் காரணமாக சரவணன் மன்னிப்பு கேட்டார்.

பின்னர் டைரக்டர் சேரனுக்கும், சரவணனுக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சேரனை பார்த்து சரவணன் தரக்குறைவான வார்த்தைகளை பேசினார். இதனை டைரக்டர் வசந்தபாலன் உள்ளிட்ட பலர் கண்டித்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டு உள்ளார்.

பெண்களை கண்ணியக் குறைவாக பேசியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரி காலத்தில் நடந்ததை ஜாலியாக கூறிய சரவணனை நீக்கியது ஏற்புடையதல்ல என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகிறார்கள்.

Next Story