புதிய படத்துக்கு தயாராகும் அஜித் 29-ந் தேதி படப்பிடிப்பு


புதிய படத்துக்கு தயாராகும் அஜித் 29-ந் தேதி படப்பிடிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 11:15 PM GMT (Updated: 7 Aug 2019 6:57 PM GMT)

அஜித்குமார் மீண்டும் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

அஜித்குமார் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் திரைக்கு வந்துள்ளது. இதில் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். வினோத் டைரக்டு செய்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். பிரச்சினையில் சிக்கும் சில பெண்களுக்கு அஜித்குமார் கோர்ட்டில் வக்கீலாக வந்து வாதாடி எப்படி உதவுகிறார் என்பது கதை.

இந்த படத்துக்கு பிறகு அஜித்குமார் மீண்டும் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். வினோத் இயக்குகிறார். இந்த தகவலை போனிகபூர் சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். அவர் கூறும்போது, “மீண்டும் அஜித்குமார்-வினோத் கூட்டணியில் புதிய படத்தை தயாரிக்கிறேன். படப்பிடிப்பு ஆகஸ்டு இறுதியில் தொடங்கும்” என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி பூஜையுடன் தொடங்கும் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்து உள்ளனர். இதில் அஜித்குமார் புதிய தோற்றத்தில் நடிக்க தயாராகிறார். அதிரடி திகில் கதையம்சத்தில் உருவாகிறது. படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்குமாரின் மகளாக அவர் நடிக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. ஏற்கனவே ஸ்ரீதேவியின் இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் அஜித்குமார் சிறப்பு தோற்றத்தில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story