தனுஷ் படம் வெளியாவதில் தாமதம் ஏன்? பட நிறுவனம் விளக்கம்


தனுஷ் படம் வெளியாவதில் தாமதம் ஏன்? பட நிறுவனம் விளக்கம்
x
தினத்தந்தி 6 Sep 2019 11:00 PM GMT (Updated: 6 Sep 2019 9:07 PM GMT)

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல தடைகளை தாண்டி நேற்று (6-ந்தேதி) திரைக்கு வரும் என்று அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. மீண்டும் படத்தை தள்ளி வைத்துள்ளனர்.

‘எனை நோக்கி பாயும் தோட்டா‘ படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“செப்டம்பர் 6-ந்தேதி வெளியாக இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெருமுயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருந்துகிறோம். மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது நீண்ட பெரும் பயணம் என்பதை நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை. இதில் ஏற்படும் தாமதத்தினால் ரசிகர்களுக்கு ஏற்படும் ஏமாற்றம், விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும்தான்.

இந்த திரைப்படத்தை திரையில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் காத்திருப்பை இந்த படம் நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம்.”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story