‘பாலைவனச்சோலை’ படத்தை இயக்கியவர் டைரக்டர் ராஜசேகர் திடீர் மரணம்


‘பாலைவனச்சோலை’ படத்தை இயக்கியவர் டைரக்டர் ராஜசேகர் திடீர் மரணம்
x
தினத்தந்தி 8 Sep 2019 11:37 PM GMT (Updated: 8 Sep 2019 11:37 PM GMT)

பிரபல இயக்குனரும், நடிகருமான ராஜசேகர் சென்னையில் மரணம் அடைந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதற்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 65.

ராஜசேகர் சென்னை அடையாறு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு படித்தவர். தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து ‘ஒரு தலைராகம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அதன்பிறகு இந்த இரட்டையர்கள் ‘பாலைவனச்சோலை’ படத்தை இயக்கினர். சுஹாசினி முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் வெற்றி பெற்றது.

பிரபு நடித்த மனசுக்குள் மத்தாப்பு, ராம்கி நடித்த சின்னப்பூவே மெல்லப்பேசு மற்றும் கல்யாண காலம், தூரம் அதிகம் இல்லை, பறவைகள் பலவிதம், தூரத்து பச்சை ஆகிய படங்களையும் இருவரும் டைரக்டு செய்தனர். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் ராஜசேகர் கதாநாயகனாக நடித்தார்.

இந்த படத்தில் அவர் பாடிய ‘ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்’ என்ற பாடல் இப்போதும் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கிறது. தொடர்ந்து பல படங்களில் நடித்தார். டி.வி தொடர்களிலும் நடித்து வந்தார். இவருக்கு சாரா என்ற மனைவி உள்ளார்.

வடபழனியில் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் ராஜசேகர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் சின்னத்திரை கலைஞர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வெள்ளித்திரை சின்னத்திரை இரண்டிலும் முத்திரை பதித்த நடிகரும் இயக்குனரும் கழகத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான ராஜசேகர் மறைந்தார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Next Story