‘எப்.ஐ.ஆர்.’ படத்தில் 3 கதாநாயகிகளுடன் விஷ்ணு விஷால்!


‘எப்.ஐ.ஆர்.’ படத்தில் 3 கதாநாயகிகளுடன் விஷ்ணு விஷால்!
x
தினத்தந்தி 10 Sep 2019 12:35 PM GMT (Updated: 10 Sep 2019 12:35 PM GMT)

மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 கதாநாயகிகளுடன் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘எப்.ஐ.ஆர்.’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘நீதானே என் பொன் வசந்தம்,’ ‘என்னை அறிந்தால்,’ ‘அச்சம் என்பது மடமையடா,’ ‘எனை நோக்கி பாயும் தோட்டா,’ ‘துருவ நட்சத்திரம்’ உள்பட பல படங்களில் இணை இயக்குனர், நிர்வாக தயாரிப்பாளர் என பல பொறுப்புகளில் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பணிபுரிந்த மனு ஆனந்த், இந்த படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார்.

விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து, ‘இன்று நேற்று நாளை,’ ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,’ ‘ஜீவா,’ ‘நீர்பறவை,’ ‘முண்டாசுப்பட்டி,’ ‘ராட்சசன்’ ஆகிய பன்முகம் கொண்ட படங்களில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால், முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் உள்ள ‘எப்.ஐ.ஆர்.’ படத்தில், இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 பேரும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆர்.என்.ஆர்.மனோகர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார். இவர், ‘அடங்கமறு’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்தவர். ‘எப்.ஐ.ஆர்.’ படத்தை பற்றி டைரக்டர் மனு ஆனந்த் கூறியதாவது:-

“சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞர், ஒரு குழப்பமான பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அந்த சம்பவம் அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப்போடுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார்? என்பதை உணர்வுப்பூர்வமான காட்சிகளாக படமாக்க இருக்கிறோம். திகில் பட பாணியில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.”

Next Story