வங்கி கொள்ளை காட்சி சுவாரஸ்யம் - பிரியங்கா சோப்ராவை எச்சரித்த போலீஸ்


வங்கி கொள்ளை காட்சி சுவாரஸ்யம் - பிரியங்கா சோப்ராவை எச்சரித்த போலீஸ்
x
தினத்தந்தி 14 Sep 2019 12:16 AM GMT (Updated: 14 Sep 2019 12:16 AM GMT)

விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களிலும் தோன்றினார்.

அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து மணந்துள்ளார். இந்தியில் 3 வருடங்களுக்கு பிறகு தற்போது ‘த ஸ்கை இஸ் பிங்க்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில் பர்ஹான் அக்தர், சைரா வாசிம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். சோனாலி போஸ் டைரக்டு செய்துள்ளார். அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மகளை காப்பாற்ற பிரியங்கா சோப்ரா நடத்தும் போராட்டமே கதை. படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த டிரெய்லரில் ஒரு காட்சியில் பர்ஹான் அக்தரிடம் பண தேவைக்காக வங்கியில் கொள்ளையடிப்பது குறித்து பிரியங்கா சோப்ரா பேசுகிறார். அதை பார்த்த மராட்டிய போலீஸ் வங்கியை கொள்ளையடித்தால் இந்திய தண்டனை சட்டம் 393-ன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வேடிக்கையாக பதிவிட்டு எச்சரித்தது.

அதைப் பார்த்த பிரியங்கா சோப்ரா, “அய்யோ போலீசில் கையும் களவுமாக சிக்கி கொண்டோமே இனிமேல் பிளான் பி திட்டத்தை செயல்படுத்த வேண்டியதுதான்” என்று வேடிக்கையாக பதில் அளித்து பதிவிட்டார். போலீசுக்கும் பிரியங்கா சோப்ராவுக்குமான இந்த சுவாரஸ்யமான உரையாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story