அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்


அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:23 PM GMT (Updated: 15 Sep 2019 11:23 PM GMT)

சென்னையில் பேனர் விழுந்து இளம் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்தின் அதிர்ச்சியால் பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

அரசியல் கட்சிகள் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களை வற்புறுத்தி உள்ளன. முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீசாகும்போது ரசிகர்கள் பேனர் கட்-அவுட்கள் வைத்து அமர்களப்படுத்துகிறார்கள்.

பாடல் வெளியீட்டு விழாக்களிலும் கட்-அவுட்கள் அமைக்கின்றனர். திருமணம், மற்றும் பிறந்த நாள் விழாக்களிலும் நடிகர்கள் படங்களுடன் சாலைகளில் பிரமாண்ட பேனர்களை வைக்கின்றனர். இதுபோல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் ரசிகர்களுக்கு தடை விதித்து உள்ளனர்.

வருகிற 19-ந்தேதி சென்னையில் நடை பெறும் விஜய்யின் பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் கட் அவுட் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளார். இந்த நிலையில் அஜித்குமார் ரசிகர்களும் பேனர் கலாசாரத்துக்கு எதிராக களம் இறங்கி உள்ளனர். அஜித் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

அதில், “பேனர் கவிழ்ந்து சகோதரி சுபஸ்ரீ உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. அஜித் படங்களுக்கு அவரது புகழை பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுக்கின்றோம்” என்று குறிப்பிட்டு உள்ளனர்.

Next Story