வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ நக்சலைட்டாக நடிக்கும் சாய்பல்லவி


வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ நக்சலைட்டாக நடிக்கும் சாய்பல்லவி
x
தினத்தந்தி 19 Sep 2019 11:00 PM GMT (Updated: 19 Sep 2019 5:31 PM GMT)

விராட பருவம் படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார்.

தற்போது விராட பருவம், என்.சி 20 ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் வருகிறார். போலீஸ் அதிகாரிக்கும் பெண் நக்சலைட்டுக்கும் மலரும் காதலை மையமாக வைத்து தயாராகிறது. அதிரடி சண்டையும் அரசியலும் படத்தில் உள்ளன.

சாய்பல்லவி நக்சலைட்டாக நடிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்பின. வளர்ந்து வரும் நடிகை இப்படி நடித்தால் இமேஜ் பாதிக்கும் என்றும் பலர் அறிவுரை சொன்னார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தெலுங்கானாவில் உள்ள வாராங்கல்லில் நடக்கிறது.

அங்குள்ள பஸ்நிலையத்தில் மேக்கப் இல்லாமல் பழைய அழுக்கான ஆடை அணிந்து சாய்பல்லவி உட்கார்ந்து இருக்கிறார். அவர் கையில் ஒரு பை உள்ளது. அதில் ஆயுதங்கள் உள்ளன. பின்னர் அங்கிருந்து பஸ் ஏற புறப்பட்டு செல்கிறார். மேக்கப் இல்லாததால் சாய்பல்லவியை பயணிகளுக்கு அடையாளம் தெரியவில்லை.

இந்த காட்சியை ஒருவர் வீடியோவில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Next Story