விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கண் பார்வையற்றவராக நயன்தாரா
தென்னிந்திய திரையுலக கதாநாயகிகளில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா, `ஐயா' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்தார்.
ஹரி டைரக்டு செய்தார். மறைந்த டைரக்டர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது.
முதல் படமே வெற்றி பெற்றதால், நயன்தாரா ராசியான நாயகியாக கருதப்பட்டார். தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழி படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், தெலுங்கு பட உலகுக்கு சென்று, அங்கேயும் பிரபல நாயகி ஆனார். அவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய சம்பளம் கோடிகளில் உயர்ந்தது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சொந்த பட தயாரிப்பிலும் இறங்கினார். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 3 படங்கள் தோல்வி அடைந்தாலும், அவருடைய `மார்க்கெட்'டை அது பாதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து ரூ.5 கோடியாக இருந்த அவருடைய சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார்.
இந்த நிலையில், அவர் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இது, கதாநாயகியின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திகில் படம். அவருடைய காதலரும், டைரக்டருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். படத்துக்கு, `நெற்றிக்கண்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. `அவள்' பட இயக்குனர் மிலந்த்ராவ் டைரக்டு செய்கிறார்.
இது, ரஜினிகாந்த் நடித்த பழைய படத்தின் பெயர் ஆகும். அந்த படத்தை தயாரித்த கவிதாலயம் நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி பெற்று, `நெற்றிக்கண்' என்ற பெயரை பயன்படுத்துவதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். இது, `பிளைண்ட்' என்ற கொரிய படத்தை தழுவிய கதை. இதில் கண் பார்வையற்றவராக நயன்தாரா நடிக்கிறார்.
Related Tags :
Next Story