கதாநாயகன் ஆனது ஏன்? -நடிகர் சூரி


கதாநாயகன் ஆனது ஏன்? -நடிகர் சூரி
x
தினத்தந்தி 23 Sep 2019 12:07 AM GMT (Updated: 23 Sep 2019 12:07 AM GMT)

வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரியை புரோட்டா காமெடி பிரபலமாக்கியது.

கதாநாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமனி, வடிவேல், விவேக், கருணாஸ், சின்னி ஜெயந்த், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு வரிசையில் இப்போது சூரியும் சேர்ந்து இருக்கிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரியை புரோட்டா காமெடி பிரபலமாக்கியது.

அதன்பிறகு காமெடி வேடங்கள் குவிந்தன. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து மளமளவென உயர்ந்தார். இப்போது புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். கதாநாயகன் ஆனது குறித்து சூரி அளித்த பேட்டி வருமாறு:-

“நான் சினிமாவில் அறிமுகமான போது பெயின்டர் வேலை செய்து கொண்டு இருந்தேன். அதன்பிறகு பல படங்களில் சிறுசிறு வேடங்களில் வந்தேன். இதுவரை 60 படங்களில் நடித்து விட்டேன். 3, 4 வருடங்களாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. நான் ஏற்கவில்லை.

இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறேன். இந்த படத்தின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒன்று. இந்த படம் பற்றி சிவகார்த்திகேயன் என்னிடம் விசாரித்தார். என் நலனில் அவருக்கு அக்கறை உண்டு. நானும் அவர் மீது அதிக பாசம் வைத்து இருக்கிறேன். நாங்கள் இருவரும் அண்ணன் தம்பியாக நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” இவ்வாறு நடிகர் சூரி கூறினார்.

Next Story