13 வருடங்கள் கதாநாயகியாக நீடிப்பது மகிழ்ச்சி - தமன்னா
தமன்னா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி, பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது:-
“சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இதில் அரண்மனையில் நடனம் ஆடும் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இதன் இந்தி பதிப்புக்கு நானே டப்பிங் பேசினேன். ஏற்கனவே பாகுபலி படம் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்திலும் புகழ் கிடைக்கும்.
எல்லாரையும் போல நானும் லட்சியத்தோடுதான் சினிமா துறைக்கு வந்தேன். அந்த லட்சியத்தை முதல் படத்திலேயே அடைந்து விட்டேன். 13 வருடங்கள் கதாநாயகியாக எனது பயணம் நீடித்துக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பெயரையும் புகழையும் முன்பே எதிர்பார்க்கவில்லை. சினிமா என்றால் எனக்கு விருப்பம். அதனால்தான் நடிகையானேன்.
நட்சத்திர அந்தஸ்து சினிமாவுக்கு வந்த புதிதில் என் மனதில் இல்லை. நடிகையாக கேமரா முன்னால் வந்ததுமே எனது லட்சியம் நிறைவேறி விட்டது. மற்றதெல்லாம் போனஸ்தான். எந்த துறையாக இருந்தாலும் செய்கிற வேலையை விருப்பத்தோடு செய்தால் எல்லாமே நம்மை தேடி வரும்.
அப்படி இல்லாமல் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பெயர், புகழ், பணம் என்ற பட்டியலோடு வந்தால் நாம் செய்கிற வேலையில் சந்தோஷம் இருக்காது.”
இவ்வாறு தமன்னா கூறினார்.
Related Tags :
Next Story