மும்பை தொழில் அதிபருடன் திருமணமா? தமன்னா விளக்கம்


மும்பை தொழில் அதிபருடன் திருமணமா? தமன்னா விளக்கம்
x
தினத்தந்தி 1 Oct 2019 12:00 AM GMT (Updated: 1 Oct 2019 12:00 AM GMT)

தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார்.

 விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது.

தற்போது பெட்ரோமாக்ஸ் என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தமிழ் தெலுங்கில் திரைக்கு வர உள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தட் இஸ் மகாலட்சுமி என்ற இன்னொரு படமும் தமன்னா நடிப்பில் வெளியாக இருக்கிறது. இந்தி படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். தமன்னாவுக்கு தற்போது 29 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் அவசரப்படுவதாகவும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்பட்டது.

இதற்கு தமன்னா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “மும்பை தொழில் அதிபருடன் எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக வெளியான தகவல் வதந்திதான். நான் சினிமாவில் இருந்து விலகவும் மாட்டேன். எனக்கு எதிராக திட்டமிட்டு இந்த வதந்திகள் பரப்பப்படுகிறது. இப்போது நான் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை” என்றார்.

Next Story