வசந்த் படத்துக்கு சர்வதேச விருதுகள்


வசந்த் படத்துக்கு சர்வதேச விருதுகள்
x
தினத்தந்தி 3 Oct 2019 11:43 PM GMT (Updated: 3 Oct 2019 11:43 PM GMT)

பிரபல இயக்குனர் வசந்த் தனது பெயரை வசந்த் எஸ் சாய் என்று மாற்றி ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இதில் பார்வதி, காளஸ்வரி சீனிவாசன், லட்சுமி பிரியா, சந்திரமவுலி ஆகியோர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச விருதுகளை வென்று வருகிறது. ஏற்கனவே மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் பாலின சமத்துவ விருது பெற்றது.

அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருதும், பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்பட விருதும் பெற்றது. தற்போது ஜப்பானில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு உயரிய விருதான புகூவோகா விருதை பெற்றுள்ளது. அத்துடன் புதுச்சேரியில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் பெண்கள் முன்னேற்றத்துக்கான சிறந்த படம் என்ற விருதை பெற்றுள்ளது. இதுகுறித்து இயக்குனர் வசந்த் எஸ் சாய் கூறும்போது, “சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து எடுத்துள்ள இந்த படத்துக்கு சர்வதேச விருதுகள் கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பின்னணி இசை இல்லாமல் இந்த படத்தை எடுத்து இருப்பது விசேஷம்” என்றார்.

Next Story