மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வனில்’ இருந்து சத்யராஜ் திடீர் விலகல்!


மணிரத்னம் இயக்கும்  ‘பொன்னியின் செல்வனில்’ இருந்து சத்யராஜ் திடீர் விலகல்!
x
தினத்தந்தி 4 Oct 2019 10:40 AM GMT (Updated: 4 Oct 2019 10:40 AM GMT)

‘பொன்னியின் செல்வனில்’ இருந்து சத்யராஜ் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத பிரமாண்டமான படங்களாக ‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 படங்களும் அமைந்தன. அதில், ‘கட்டப்பா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து இருந்தார். அது, கதாநாயகனுக்கு இணையான குணச்சித்ர வேடம். 2 படங்களிலும் சத்யராஜின் திறமையான நடிப்பு பேசப்பட்டது.

இதையடுத்து மணிரத்னம் டைரக்டு செய்யும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த படத்தில், ‘பழுவேட்டரையர்’ என்ற முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருந்தார். இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து சத்யராஜ் திடீரென்று விலகிக் கொண்டார்.

‘‘6 மாதங்கள் கால்ஷீட் வேண்டும்...இடையில் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது’’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால், சத்யராஜ் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம், சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள அடர்ந்த காடுகளில், வருகிற டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. டைரக்டர் மணிரத்னம் கேட்டுக்கொண்டபடி, படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கதாநாயகர்கள் அனைவரும் தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறார்கள்.

Next Story