லண்டன் இளைஞருடன் காதலை முறித்தது ஏன்? நடிகை சுருதிஹாசன் விளக்கம்


லண்டன் இளைஞருடன் காதலை முறித்தது ஏன்? நடிகை சுருதிஹாசன் விளக்கம்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:45 PM GMT (Updated: 9 Oct 2019 7:21 PM GMT)

லண்டன் இளைஞருடன் காதல் முறிவுக்கான காரணம் குறித்து சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன் ‘லக்’ இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்தார். பின்னர் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்தார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தந்தையிடமும், மும்பைக்கு சென்று தாய் சரிகாவிடமும் அறிமுகப்படுத்தினார். தற்காலிகமாக நடிப்பதையும் நிறுத்தி இருந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று சுருதிஹாசன் பதிவிட்டார். இதுபோல் மைக்கேலும் தனித்தனி பாதையில் பயணிக்க உள்ளோம் என்று பதிவிட்டார்.

காதல் முறிவுக்கான காரணம் குறித்து சுருதிஹாசன் வெளிப்படையாக பேசவில்லை. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுருதிஹாசனிடம் காதல் முறிவு குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

“காதலுக்கு இதுதான் விதி என்று எதுவும் இல்லை. நல்லவர்கள் சில நேரங்களில் நன்றாகத்தான் நடந்து கொள்கிறார்கள். அதே மனிதர்கள் சில நேரங்களில் தவறானவர்களாகவும் இருக்கின்றனர். காதல் முறிவினால் எனக்கு எந்த வேதனையும் இல்லை. ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

இந்த காதல் மூலமாக நிறைய கற்றுக்கொண்டேன். அதை ஒரு கற்க கூடிய அனுபவமாக எடுத்துக்கொண்டேன். அடுத்து ஒரு சிறந்த காதலுக்காக காத்து இருக்கிறேன். அது கிடைக் கும்போது மகிழ்ச்சியாக அறிவிப்பேன்.”

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Next Story