வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் பேய் படத்தில் ஹன்சிகா


வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் பேய் படத்தில் ஹன்சிகா
x
தினத்தந்தி 10 Oct 2019 10:00 PM GMT (Updated: 10 Oct 2019 5:39 PM GMT)

நடிகை ஹன்சிகா மீண்டும் பேய் படத்தில் நடிக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் பக்கம் நடிகைகள் பார்வை திரும்பி இருக்கிறது. நயன்தாரா ஏற்கனவே தன்னை முதன்மைப்படுத்தும் படங்களில் நடித்துள்ளார். அவை வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்துள்ளன. தமன்னா பெட்ரோமாக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். 

அமலாபால் ‘ஆடை’ படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அனுஷ்காவும் அருந்ததியில் இருந்து தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் வரிசையில் ஹன்சிகாவும் தன்னை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்க கதை கேட்டு வந்தார். 

இப்போது அப்படி ஒரு கதையை தேர்வு செய்து நடிக்கிறார். இது பேய் கதை உடன் திகில் படமாக தயாராகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தில் பேயாக ஹன்சிகா நடித்துள்ளார். புதிய படத்தை ஹரி அண்ட் ஹரிஷ் இயக்குகின்றனர். இவர்கள் அம்புலி, அ, ஜம்புலிங்கம் ஆகிய படங்களை எடுத்தவர்கள். 

இந்த படத்தில் ஹன்சிகாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே 2 இந்தி படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் மூலம் தற்போது தமிழ் பட உலகில் அறிமுகமாகிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்கி கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

Next Story