ரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு


ரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு
x
தினத்தந்தி 13 Oct 2019 11:12 PM GMT (Updated: 13 Oct 2019 11:12 PM GMT)

விஜய் நடித்து 2003-ல் வெளியான புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

அமிஷா படேல், குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கி இருந்தனர்.

படம் 2018-ல் திரைக்கு வரும் என்றும் அப்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் அமீஷா பட்டேல் கூறியுள்ளார். ஆனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்காக வட்டியையும் சேர்த்து ரூ.3 கோடிக்கு அமிஷா பட்டேல் செக் கொடுத்துள்ளார்.

அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சியான அஜய்குமார் கோர்ட்டில் அமீஷா பட்டேல் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அமீஷா பட்டேலுக்கு பல தடவை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது. அவரை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர்.

ஏற்கனவே 2016-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆட ரூ.11 லட்சம் வாங்கி கொண்டு கடைசி நேரத்தில் நடனம் ஆட மறுத்து விட்டதாக அமீஷா பட்டேல் மீது மும்பை போலீசில் புகார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story