ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்


ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2019 11:30 PM GMT (Updated: 14 Oct 2019 10:44 PM GMT)

ரிஷிகேஷில் ரஜினியுடன் பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் அங்கு ரஜினியை காண கூட்டம் திரண்டது.


நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார். உத்தரகாண்ட் ரிஷிகேஷ் புனித தலத்தில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்தார். அங்கு ரஜினியை பார்க்க பக்தர்கள் திரண்டனர். செல்பியும் எடுத்துக்கொண்டனர். அவர்களோடு சிரித்தபடி போஸ் கொடுத்தார்.

பின்னர் ஆன்மிக பயணத்தை தொடர்ந்தார். காவி உடை அணிந்து நடந்தே சென்றார். குகைகோவில்களில் சாமி கும்பிட்டார். சாலையோர கடைகளில் உணவு வாங்கி சாப்பிட்டார். சில இடங்களில் தரையில் உட்கார்ந்தார். வழியில் சாமியார்களை சந்தித்து ஆசி பெற்றார். ரஜினியை அடையாளம் கண்டு அங்கங்கே பக்தர்கள் திரண்டனர்.

அவர்களை பார்த்து கையசைத்துகொண்டே பயணத்தை தொடர்ந்தார். துவாரகா ஹாட் குருசரண் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்குகிறார். பாபாஜி குகையில் அமர்ந்து தியானம் செய்கிறார். இமயமலை பயணம் மூலம் உடம்பையும், மனதையும் புத்துணர்வுக்கு மாற்றி விட்டு சென்னை திரும்பி படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை சிவா இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை.

ஏற்கனவே சிவா இயக்கிய வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களைப்போல் ரஜினிகாந்த் கதாபாத்திரம் தாதாவாக சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.


Next Story