நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை


நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 21 Oct 2019 12:18 AM GMT (Updated: 21 Oct 2019 12:18 AM GMT)

கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.

சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மஞ்சிமா மோகன் காலில் சமீபத்தில் இரும்பு கதவு இடித்து விபத்து ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சாதாரண காயம் என்று சொல்லி மருந்து வைத்து கட்டியுள்ளனர். ஆனால் இரும்பு துகள்கள் காலிலேயே இருந்ததால் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கிறார். இதுகுறித்து வலைத்தளத்தில் மஞ்சுமா மோகன் கூறியிருப்பதாவது:-

“சில வாரங்களுக்கு முன்பு என் வாழ்க்கையில் ஒரு விபத்து ஏற்பட்டது. இதற்காக சிறிய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு ஒரு மாதம் காலில் கட்டுடன் படுக்கையிலேயே கழித்து வருகிறேன். இதற்கு முன்பு வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான நிலைமை எது என்று கேட்டால் அப்படி எதுவும் இல்லை என்பதுதான் என் பதிலாக இருக்கும்.

ஆனால் இனிமேல் அப்படி சொல்ல முடியாத அளவுக்கு இந்த விபத்து ஏற்பட்டு விட்டது. படுத்த படுக்கையில் இருப்பது எளிதானது இல்லை. இதனால் எனது வேலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. மற்றவர்களுடன் பேச முடியவில்லை. இந்த சூழல் என்னை வலிமையான பெண்ணாக மாற்றி இருக்கிறது. இதுவும் கடந்து போகும்.’‘ இவ்வாறு மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.

Next Story