வாட்ஸ் ஆப் குழுவில் அவதூறு... நடிகையின் கணவர் தற்கொலை


வாட்ஸ் ஆப் குழுவில் அவதூறு... நடிகையின் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Oct 2019 12:07 PM GMT (Updated: 25 Oct 2019 12:07 PM GMT)

வாட்ஸ் ஆப் குழுவில் கேமரா திருடன் என அவதூறு பரப்பியதால் நடிகையின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அவரது சட்டை பையில் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை மூலம் அவர் பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பம், லீலாவதி நகரை சேர்ந்த சசிக்குமார் என்பதும் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட முகவரிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த பின்னர் தான் தூக்கில் சடமாக தொங்கியவர் பிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் என்பது தெரிய வந்தது

நடிகை ராகவி ராஜா சின்ன ரோஜா, மகராசன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளரான சசிக்குமாரை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர், திருமதி செல்வம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மனைவி ராகவியிடம் நடத்திய விசாரணையில் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட அவதூறு தகவல் தான் அவரது கணவரின் தற்கொலைக்கு காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த சசிக்குமார் வாடகைக்கு வெளியில் எடுத்துச்சென்ற கேமராவை மீண்டும் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. கேமரா தொலைந்து விட்டதாக சசிக்குமார் கூறிவந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் மகேஷ்குமார் என்பவர் சசிக்குமாரை கேமரா திருடன் என குற்றஞ்சாட்டி ஒளிப்பதிவாளர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் சசிக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் சசிக்குமாரை அழைத்து விசாரித்துள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலும் அவமானமும் அடைந்த சசிக்குமார், கடந்த 9 ந்தேதி வெளியில் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதன் பின்பு சசிக்குமார் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் பெங்களூருவில் இருந்து ஆம்பூருக்கு ரெயிலில் வந்து அங்கிருந்து ஜோலார்பேட்டை ஏரிக்கரைக்கு வந்த சசிக்குமார் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு சோக முடிவை தேடிக் கொண்டது தெரிய வந்துள்ளது. 

Next Story