பணத்துக்காக ரசிகர்களை ஏமாற்றுவதா? பட அதிபருடன் நடிகர் ராணா மோதல்
பணத்துக்காக ரசிகர்களை ஏமாற்றுவதா? என்று பட அதிபருக்கு எதிராக நடிகர் ராணா கருத்து தெரிவித்துள்ளார்.
அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராணா, பாகுபலியில் வில்லனாக மிரட்டினார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். ராணா நடித்துள்ள புதிய படம் தமிழில் ‘மடை திறந்து’ என்ற பெயரிலும், தெலுங்கில் ’1945’ என்ற பெயரிலும் தயாராகி உள்ளது.
இதில் கதாநாயகியாக ரெஜினா மற்றும் சத்யராஜ், நாசர் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்ய சிவா இயக்கி உள்ளார். ராஜராஜன் தயாரித்துள்ளார். இந்த படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்தது. தற்போது படத்தின் முதல் தோற்றம் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராணா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘இந்த படம் பண விவகாரம் காரணமாக தயாரிப்பாளரால் முடிக்கப்படாத படம். நான் ஒரு வருடத்துக்கு மேலாக அந்த படக்குழுவினரை சந்திக்கவில்லை. மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காகவே இதனை வெளியிட்டுள்ளனர். இதை ஊக்குவிக்க வேண்டாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ராணாவின் கருத்து பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுத்து தயாரிப்பாளர் ராஜராஜன் கூறும்போது, ‘‘ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதா இல்லையா என்பதை அந்த படத்தின் இயக்குனர்தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் நடந்துள்ளது. கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்பட்டு உள்ளது.
முடியாத ஒரு படத்தை யாரும் வெளியிட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story