மஞ்சுவாரியரை மிரட்டிய இயக்குனருக்கு நோட்டீஸ்


மஞ்சுவாரியரை மிரட்டிய இயக்குனருக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:45 PM GMT (Updated: 29 Oct 2019 5:55 PM GMT)

மஞ்சுவாரியரை மிரட்டிய டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் நடித்து வருகிறார். அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் பட உலகிலும் அறிமுகமாகி உள்ளார். மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனுக்கும், மஞ்சு வாரியருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. 

மஞ்சு வாரியர் கேரள டி.ஜி.பி.யிடம் அளித்த புகார் மனுவில், ‘‘இயக்குனர் ஸ்ரீகுமார் சமூக வலைத்தளத்தில் என்மீது அவதூறு பரப்பி வருகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன்’’ என்று கூறியிருந்தார். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனை மறுத்த ஸ்ரீகுமார் மேனன் கூறும்போது, ‘‘காரியம் முடிந்ததும் கைகழுவுபவர்தான் மஞ்சுவாரியர். திலீப்பை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறியபோது கையில் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே உள்ளது என்றார். அப்போது ரூ.25 லட்சம் கொடுத்து விளம்பர படத்துக்கும், சினிமாவுக்கும் அவரை ஒப்பந்தம் செய்தேன். என்மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன்’‘ என்றார்.

இந்த நிலையில் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிரான புகாருக்கு ஆதாரமான தகவல்களை மஞ்சு வாரியர் போலீசில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து திருச்சூர் போலீசார் டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படியும் ஸ்ரீகுமார் மேனனுக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story