நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதி


நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 31 Oct 2019 9:55 AM GMT (Updated: 31 Oct 2019 9:55 AM GMT)

பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா.

ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனை தொடர்ந்து அவர், சொந்த ஊரான பரவைக்கு வந்து விட்டார். அங்கு மூளைவளர்ச்சி குன்றிய தனது மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்தார்.

பரவை முனியம்மாவுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளி மகன் செந்தில்குமாரை தவிர, மற்றவர்களுக்கு திருமணமாகிவிட்டது.

85 வயதை எட்டிவிட்டதால் சரிவர காது கேட்காத நிலையிலும், வாய் பேசமுடியாத நிலையில் உடல்நலம் குன்றி, படுத்த படுக்கையாக இருந்துவருகிறார். நோய்வாய்ப்பட்ட பரவை முனியம்மாவை அவருடைய மகள்கள் வள்ளி, ராக்கு, ஈஸ்வரி, மருமகள் முத்துலட்சுமி ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் மூச்சு திணறல் காரணமாக நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரவை முனியம்மா தற்போது நலமுடன் உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story