ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது: கமல்ஹாசன் வாழ்த்து


ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது: கமல்ஹாசன் வாழ்த்து
x
தினத்தந்தி 3 Nov 2019 5:36 PM GMT (Updated: 3 Nov 2019 5:36 PM GMT)

சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு விழா, நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி” விருது வழங்கப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் “ இந்திய திரைப்பட துறைக்கு கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு, கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட பொன்விழா ஆண்டையொட்டி ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை அவருக்கு அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story