வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட ஷாருக்கான்


வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட ஷாருக்கான்
x
தினத்தந்தி 8 Nov 2019 11:15 PM GMT (Updated: 8 Nov 2019 9:02 PM GMT)

இந்தியில் முன்னணி நடிகராக உள்ள ஷாருக்கான் மற்ற நடிகர்களைப்போல் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கிறார். இளம் வயது வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:-

“நான் சினிமா துறைக்கு சம்பந்தம் இல்லாத குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். கான் நடிகர்கள் என்று சொல்லக்கூடிய 3 பேரில் நானும் ஒருவன். இந்த பயணத்தில் எவ்வளவோ சிரமங்களை சந்தித்து இருக்கிறேன். சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன்.

நடிக்க வாய்ப்பு கேட்டு மும்பைக்கு வந்த போது வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். பெற்றோர்களை விட்டு விலகி விட்டேன். பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டேன். அப்போதே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இருக்க ஒரு வீடு கூட இல்லை. என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கு என்று நினைத்தேன்.

அதனால் ஏதாவது இழந்து விட்டோமோ என்று எப்போதும் நினைத்தது இல்லை. கஷ்டப்பட்ட காலத்தில் நடிகை ஜுகிசாவ்லா எனக்கு ஆதரவாக இருந்தார். அதன்பிறகு மிகவும் சந்தோஷமான வாழ்க்கை அமைந்தது. நான் அப்போது எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன்.

இப்போது எனக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. ஆனால் அது எனது இளைய மகனுக்கு தெரியவில்லை. என்னை சாதாரண ஆளாகவே நினைக்கிறான்.

இவ்வாறு ஷாருக்கான் கூறினார்.

Next Story