நான் காணாமல் போய்விட்டதாக தங்கை பொய் புகார் - பாடகி சுசித்ரா


நான் காணாமல் போய்விட்டதாக தங்கை பொய் புகார் - பாடகி சுசித்ரா
x
தினத்தந்தி 14 Nov 2019 9:32 AM GMT (Updated: 14 Nov 2019 9:32 AM GMT)

காணாமல் போனதாகக் கூறப்பட்ட பின்னணி பாடகி சுசித்ரா, சென்னை நட்சத்திர ஓட்டலில் இருந்து மீட்கப்பட்டார்.

சென்னை,

சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்கங்கள் வெளியானது. இதன் பின்னணியில் சுசித்ரா இருப்பதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அதனை சுசித்ரா மறுத்தார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, சுசித்ராவின் கணவரான, யாரடி நீ மோகினி பட நடிகர் கார்த்திக் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து சென்று விட்டார். இதை அடுத்து அடையாறில் உள்ள வீட்டில் சுசித்ரா தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் , கடந்த 11-ந்தேதி சுசித்ராவைக் காணவில்லை என்று, அவரது சகோதரியான சுனிதா ராமதுரை என்பவர், அடையாறு போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போன் எண்ணை வைத்து சுசித்ராவை தேடி வந்தனர். அவரது செல்போன் எண்ணின் இருப்பிடம் அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலை காட்டியது.

அந்த இடத்திற்குச் சென்ற போலீசார் சுசித்ராவை மீட்டனர். அப்போது தனது சகோதரியை பார்த்து சுசித்ரா பலமாக சத்தமிட்டதாகக் கூறப்படுகிறது. தனது குடும்பம் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் வெளி உலகிற்கு காட்ட முயற்சிப்பதாகவும், தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் என்று சுசித்ரா போலீசிடம்  தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி பாடகி சுசித்ராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 

நான் மாயமானதாக கூறி பொய்யான புகாரை போலீசில் அளித்துள்ளனர். இப்போதும் என்னை ஆஸ்பத்திரியில் வலுக்கட்டாயமாக அனுமதித்துள்ளனர். நான் மாயமாகவில்லை. ஓட்டலில் சென்று ஓய்வு எடுத்தேன். இதுபோன்று புகார் அளிப்பதற்கான காரணம் என்ன? என்பது எனக்கு தெரியவில்லை என்றும் சுசித்ரா தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் புகார் அளித்த சுசித்ராவின் தங்கை சுனிதாவிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார்.

Next Story