சிவாஜியை ஏமாற்றிய சோ


சிவாஜியை ஏமாற்றிய சோ
x
தினத்தந்தி 22 Nov 2019 12:50 PM GMT (Updated: 22 Nov 2019 12:50 PM GMT)

சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கண்ணதாசன் பணிபுரிந்த நேரம். அவர்கள் நடத்திக்கொண்டு இருந்த ‘சண்டமாருதம்’ என்ற வாரப் பத்திரிகைக்கு கவிஞர்தான் ஆசிரியர். துணை ஆசிரியராக பணியாற்றியவர் முக்தா ஸ்ரீனிவாசன்.

சண்டமாருதம் இதழில் வாராவாரம் ராசிபலன் பகுதி நிச்சயமாக இடம்பெறும். அந்த ராசிபலனை சேதுமாதவன் நாயர் என்பவர் எழுதிவந்தார். யார் படிக்கிறார்களோ இல்லையோ இந்த ராசிபலன் பகுதியை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தின் மனைவி கே.எல்.வி.வசந்தா நிச்சயமாக படிப்பார். அதனாலேயே சேதுமாதவன் நாயர் கேரளாவில் இருந்த தனது சொந்த ஊருக்கு போகும்போது கூட, அங்கிருந்து ராசிபலன் பகுதியை எழுதி அதை முக்தா ஸ்ரீனிவாசனுக்கு அனுப்பிவிடுவார்.

ஒருமுறை சேதுமாதவன் நாயர் கேரளா சென்றிருந்தபோது, அவரது உறவினர் ஒருவர் முக்தாவுக்கு டிரங்க்கால் செய்து ‘நாயருக்கு உடல் நலம் சரியில்லை. இன்னும் இரண்டு வாரங்களுக்கு அவர் வேலைக்கு வரமாட்டார்’ என்று கூறினார்.

டி.ஆர்.சுந்தரம் என்றாலே எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். அவரை எதிர்த்துப் பேசவோ, மறுத்துப் பேசவோ அன்றைய பிரபல நடிகர்களும், இயக்குனர்களும் துணிந்தது இல்லை.

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்பட படப்பிடிப்பின் போது “கடவுள் சாட்சியாக சொல்கிறேன்” என்ற வசனத்தை எம்.ஜி.ஆர். பேச மறுத்ததால், இறுதிக்கட்ட படப்பிடிப்பை எம்.ஜி.ஆர். இல்லாமலே ‘டூப்’ நடிகரை வைத்து எடுத்து படத்தை வெளியிட்டவர் அவர்.

‘சேதுமாதவன் நாயர் உடல் நலமில்லாமல் இருக்கிறார், அதனால் ராசிபலன் பகுதி இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு வராது’ என்று டி.ஆர்.சுந்தரத்திடம் சொல்வதற்கு கண்ணதாசனுக்கும் துணிவில்லை, முக்தாவுக்கும் துணிவில்லை.

‘என்ன செய்வது?’ என்று யோசித்து கடைசியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.

ராசிபலன் பகுதியை நாயர் எழுதியது போலவே, இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிவிடுவது என்பதுதான் அவர்கள் எடுத்த முடிவு.

இரண்டு மாத சண்டமாருதம் இதழ்களை எடுத்து வைத்துக்கொண்டு, அதில் ஒவ்வொரு ராசிக்கும் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்து, அதன் சாரத்தை எடுத்து, சேதுமாதவன் நாயர் எழுதிய பாணியிலேயே அப்பா எழுதினார். அவ்வப்போது முக்தா திருத்தம் சொல்வார். இதனை அந்த வார இதழில் வெளியிட்டனர்.

நான்கு அல்லது ஐந்து தினங்கள் கழித்து, கே.எல்.வி.வசந்தா, சேதுமாதவன் நாயரை அழைப்பதாக ஆள் வந்து சொல்லவும், கை-கால்கள் நடுங்க கண்ணதாசனும், முக்தா ஸ்ரீனிவாசனும் கே.எல்.வி.வசந்தாவின் அறைக்கு சென்றனர்.

இவர்களைப் பார்த்தவுடன் வசந்தா, “நான் நாயரை வரச் சொன்னா நீங்க வந்து இருக்கீங்க” என்று கேட்டார்.

“அது வந்து நாயர்...” என்று இவர்கள் இழுக்க...

“இந்த வார ராசிபலன் ரொம்ப பிரமாதம். நாயரை நேர்ல கூப்பிட்டு பாராட்டணும்னு தான் அவரை வரச் சொன்னேன்” என்றார் திருமதி வசந்தா.

இவர்களுக்கு பயத்துடன் ‘உண்மையை சொல்வதா? வேண்டாமா?’ என்ற குழப்பமும் சேர்ந்து, பயத்தை இன்னும் அதிகம் ஆக்கிற்று.

கவிஞருக்கு பொய் சொல்ல வராது, சொல்லவும் தெரியாது. அவர் உடனே “சேதுமாதவன் நாயருக்கு உடம்பு சரியில்லை. அதனால நானும் சீனுவும் சேர்ந்து இதை எழுதினோம்” என்று உண்மையை சொல்லிவிட்டார்.

வசந்தாவுக்கு பயங்கரமான அதிர்ச்சி. சிறிது நேரம் மவுனமாக இருந்தவர், பின் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார்.

பிறகு இவர்களைப் பார்த்து “இந்த விஷயம் முதலாளிக்கு தெரியாம பாத்துக்குங்க” என்றார்.

‘அப்பாடா’ என்று கவிஞரும், முக்தாவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

கண்ணதாசன் எழுதியது அப்படியே சேதுமாதவன் நாயர் எழுதியதைப் போலவே இருந்ததால், டி.ஆர்.சுந்தரம் கழுகுப் பார்வையில் இருந்து தப்பியது.

சில நாட்கள் கழித்து சேதுமாதவன் நாயர் திரும்பி வந்து பணியில் சேர்ந்தார். நடந்ததை தெரிந்து கொண்ட அவர், இவர்கள் எழுதியதை படித்து விட்டு, கோபத்துடன் “நீங்க எழுதுனது மோசமான குப்பை. இந்தக் குப்பையை படிச்சிட்டு அந்தம்மாவும் நல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க?” என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.

அப்பாவுக்கு ஜோசியம், ஜாதகத்தில் நம்பிக்கை உண்டு, ஆனால் ராசிபலன் படிக்க மாட்டார். முக்தாவுக்கு எதிலும் நம்பிக்கை இல்லை.

அடுத்தது- முக்தா ஸ்ரீனிவாசன், முக்தா பிலிம்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சிறிய பட்ஜெட்டில் நகைச்சுவை படங்களை இயக்கி, தயாரித்துக் கொண்டிருந்தார்.

முதல் முறையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து முக்தா பிலிம்சில் ஒரு படம் தயாரிக்க விருப்பப்பட்டு, சிவாஜியின் கால்ஷீட்டையும் வாங்கிவிட்டார்.

இயக்குனர் மகேந்திரனி்ன் கதையை வாங்கி, சோவின் திரைக்கதை வசனத்தில் சிவாஜி மற்றும் வாணிஸ்ரீ நடிக்க ‘நிறைகுடம்’ படத்தை தொடங்கினார்.

சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ படத்தில் தான், சோ திரைப்பட நடிகராக அறிமுகமானார். அதனால் சிவாஜி அவரை உரிமையுடன் ஏக வசனத்தில் அழைப்பார். படத்தில் பெரும்பாலான காட்சிகளும் வசனங்களும் நகைச்சுவையாக அமைந்து இருந்தன.

அந்த கால கட்டத்தில் இலக்கியத்தரமான வசனம் கொண்ட காட்சியோ அல்லது ஓரங்க நாடகமோ சிவாஜி படங்களில் இடம் பெறவேண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் வற்புறுத்துவார்கள். அதற்காகவே சிவாஜியும் வாணிஸ்ரீயும் பேசும் காதல் காட்சி ஒன்றை படத்தில் சேர்த்தார்கள்.

“டேய், நீ கேலியும் கிண்டலுமா நல்லா எழுதுவே. ஆனா இது வேற மாதிரி. பொண்ணுங்களை வர்ணிச்சு எழுதுறது உனக்கு பிடிக்காது. அதிலயும் இந்த வர்ணனை இலக்கியத் தரமாவும் இருக்கணும். அப்படி எழுதுவியா?” -சிவாஜி.

“ஏன் என்னால எழுத முடியாதுன்னு நினைக்கிறீங்களா?” -சோ.

“நீ நல்லா எழுதுவே, ஆனா இந்த மாதிரி எழுதினது இல்லையே. இதிலயும் காமெடி சேர்த்திடுவியே” -சிவாஜி.

“நாளைக்கு எழுதி கொண்டுவந்து தரேன். பாத்திட்டு பேசுங்க” -சோ.

மறுநாள் அந்தக் காட்சிக்கான வசனத்தை சோ கொண்டு வந்து தந்தார்.

வசனத்தைப் படிக்க ஆரம்பித்தார் சிவாஜி...

‘மயிலின் தோகை போல் பறந்து கிடக்கும் கூந்தல் என்று சிலர் வர்ணிப்பார்கள்.

ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை.

கணக்கிட முடியாத கேசங்கள் நிறைந்த உன் கூந்தல், அளவிடமுடியாத உன் அன்பைப்போல் இருக்கின்றன.

மஞ்சள் பூசிய நெற்றியிலே இருக்கும் செந்நிற குங்குமப் பொட்டு-

மற்றவர்களுக்கு மாங்கல்யத்தின் மங்கலத்தையும் சுகத்தையும் காட்டுவது போல் தெரியலாம்.

ஆனால் எனக்கு..

களங்கமில்லாத ஒரு பெண், மனம் உவந்து ஏற்றுக்கொண்ட மணவாழ்க்கையிலே மறைந்திருக்கும் அபாயத்தைத் தான் அந்த செந்நிறம் காட்டுகிறது.

செம்பவழ வாய் திறந்து என்று புலவர்கள் கூறலாம். ஆனால் உன் இதழ்கள் பிரிந்து சேரும்போதெல்லாம், அந்தத் துடிப்பிலே, உன் இதயம் எனக்காக துடிக்கும் துடிப்பைத்தான் நான் காண்கிறேன்.

பளிங்கு நீரைப் போன்ற உன் வெள்ளை விழிகளிலே துள்ளி விளையாடும் கருவிழிகளைப் பார்த்துத் தானோ என்னவோ கவிஞர்கள் மீன் விழியாள் என்று வர்ணிக்கிறார்கள்.

ஆனால் என் முகத்தின் பிரதிபலிப்பை உன் கருவிழி களிலே காணும்போதெல்லாம்-

ஒரு வெள்ளை உள்ளத்திலே புகுந்துவிட்ட களங்கம் போல் தான் தெரிகிறது.

கைகளைப் பற்றி கற்றோர்கள் என்ன சொல்வார்களோ எனக்குத் தெரியாது.

ஆனால் ஐந்து விரல்களைக் கொண்ட உன் கைகள், அன்பு, பாசம், பரிவு, காதல் என்ற நான்கையும் அள்ளித்தரும் கருணையின் வடிவமாகவே எனக்கு காட்சியளிக்கின்றன.

ஐந்தாவது விரல் ஏன்? என்று கேட்கலாம்.

இவை அனைத்தும் உனக்கே உனக்கே என்று என்னை சுட்டிக்காட்டவே அந்த விரல்.

பொன்மலர்ப் பாதங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

உன் பாதங்களை நம்பி நீ நிற்கிறாய்

உன்னை நம்பி நான் நிற்கிறேன்.’

இப்படிப்போய் முடியும் அந்த வசனம்.

வசனங்களைப் படித்து முடித்த சிவாஜிக்கு ஒரே ஆச்சரியம். “டேய் குரங்கா! (சந்தோஷம் வரும் போதெல்லாம் சோவை அப்படி உரிமையுடன் அழைப்பார் சிவாஜி) நெஜமாவே நீ தான் எழுதினியா? பொம்பளைங்களை வர்ணிச்சு எழுத உனக்கு பிடிக்காதே.”

“எனக்கு பிடிக்காது தான், ஆனா உங்களுக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சி எழுதிக்கிட்டு வந்திருக்கேன். எப்படி இருக்கு?”

“ரொம்ப நல்லா எழுதி இருக்கடா” என்ற சிவாஜி அந்த காட்சியில் நடித்தார்.

மதியம் செட் வாசலில் உட்கார்ந்து, அடுத்த காட்சிக்கான வசனத்தை உதவி இயக்குனரை படிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டிருந்தார், சிவாஜி.

அப்போது அப்பா அந்தப் பக்கமாக வந்தார்.

அவர் சிவாஜியைப் பார்த்ததும் “என்னய்யா, சோ கேட்டார்னு ஒரு காட்சிக்கு வசனம் எழுதித் தந்தேன். என் வசனத்தை படிச்சியா? நல்லா இருந்துச்சா?” என்று கேட்க, சிவாஜிக்கு சட்டென்று புரிந்துவிட்டது.

“நீ எழுதித் தந்தியா?, அதான பார்த்தேன். டேய் எங்கடா அந்த திருட்டுக் குரங்கன்?” என்று சிவாஜி கேட்க, சோ எஸ்கேப்.

(‘என்றென்றும் கண்ணதாசன்’ தொடரை தினத்தந்தியில் படித்த முக்தா ஸ்ரீனிவாசன் மகள் மாயா ஸ்ரீனிவாசன், முக்தாவின் மகன் முக்தா ரவி ஆகியோர் கவியரசருக்கும் முக்தா ஸ்ரீனிவாசனுக்கும் இடையில் நடந்த சில சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதில் ஒன்று தான் இது.)

அப்பாவின் நகைச்சுவை

நான் புதுக்கல்லூரியில் பி.யு.சி., பி.ஏ. (ஆங்கில இலக்கியம்), எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்) படித்தேன். எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை பெருமைக்குரியது. பேராசிரியர்கள் நா.பாண்டுரங்கன், கவிஞர் இன்குலாப் (சாகுல் ஹமீது), கவிஞர் ஈரோடு தமிழன்பன், காதர் பாஷா போன்றவர்களால் சிறப்பு பெற்றது.

என் அண்ணன்கள் கமால், கண்மணி சுப்பு ஆகியோரும் புதுக்கல்லூரியில் தான் படித்தார்கள்.

ஒருமுறை ஒரு கவியரங்கத்தில் அப்பாவை சந்தித்த ஈரோடு தமிழன்பன் “கவிஞர்! உங்க மகன் கமால் எங்க புதுக்கல்லூரியில் படித்தான். பிறகு கண்மணி சுப்பு படித்தான். இப்போது அண்ணாதுரை படித்துக் கொண்டு இருக்கிறான்” என்றார்.

அதற்கு அப்பா, “தமிழன்பன்! நீங்க ரிட்டையர் ஆகுற வரைக்கும், என் பிள்ளகளில் ஒன்று உங்க கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்” என்றார்.

-தொடரும்.

Next Story