பொன்னியின் செல்வனில் மேலும் நடிகர்கள்


பொன்னியின் செல்வனில் மேலும் நடிகர்கள்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:30 PM GMT (Updated: 13 Dec 2019 6:10 PM GMT)

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் நடிகர், நடிகைகளின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாக மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பிரபு, விக்ரம்பிரபு, ரகுமான், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் மேற்கண்ட நடிகர்களுடன் சரத்குமார், கிஷோர், அஸ்வின் காக்கமுனு ஆகியோரின் பெயர்களும் புதிதாக இடம்பெற்று உள்ளன. சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பார்த்திபன், சத்யராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேசை ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர் நடிக்கவில்லை. ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

திரைக்கதையை மணிரத்னமும் குமரவேலும் எழுதி உள்ளனர். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். சுபாஷ்கரனும் மணிரத்னமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்குள்ள பாங்காக்கில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. 40 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.

Next Story