ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது


ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பு  இன்று ஐதராபாத்தில் தொடங்கியது
x
தினத்தந்தி 18 Dec 2019 10:15 AM GMT (Updated: 18 Dec 2019 10:15 AM GMT)

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.

ஐதராபாத்

ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் 2020-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிகர் சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். எந்திரன், பேட்ட படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் படபூஜை நடைபெற்ற நிலையில், இன்றுமுதல் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் படக்குழு ஐதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளது. முன்னதாக ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் -சிவா டீமும் அங்கு படப்பிடிப்புக்காக சென்றுள்ளனர்.

இதனால் ரஜினிகாந்தும் -அஜித்தும் நேரில் சந்தித்துக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற அசல் படத்தின் பூஜை, அதன் பின்னர் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் அஜித் - ரஜினி இருவரும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் இருவரும் சந்தித்துக் கொள்ளும் சூழல்  உருவாகியுள்ளது.

Next Story