செல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் - நடிகை நமிதா பிரமோத் வருத்தம்


செல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் - நடிகை நமிதா பிரமோத் வருத்தம்
x
தினத்தந்தி 13 Jan 2020 1:28 AM GMT (Updated: 13 Jan 2020 1:28 AM GMT)

செல்பி எடுப்பதாக கூறி உடம்பை தொடுகிறார்கள் என நடிகை நமிதா பிரமோத் வருத்தம் தெரிவித்துள்ளார்.


பட விழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் நடிகைகளுக்கு ரசிகர்களால் தொல்லைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. பொது இடங்களில் நடிகைகளுடன் செல்பி எடுக்க முண்டியடிக்கும்போது நடிகைகள் ரசிகர்கள் பிடியில் சிக்கி தவித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

இதனால் சில நடிகைகளுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன. விமான நிலையத்திலும் இதுபோன்ற தொல்லைகளை சந்திக்கிறார்கள். கைகுலுக்கும் போர்வையில் நடிகை சாரா அலிகானை ஒரு ரசிகர் அத்துமீறி முத்தமிட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தனக்கும் இதுபோன்ற தொல்லைகள் ஏற்பட்டுள்ளதாக நடிகை நமிதா பிரமோத் கூறியுள்ளார். இவர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் கூறியதாவது:-

“பொது இடங்களுக்கு செல்லும்போது தொல்லைகளை சந்திக்கிறேன். சிறுவர்களும், பெண்களும் என்னை ஒரு சகோதரிபோல் நினைத்து அன்பாக பழகுகிறார்கள். என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றனர். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஆனால் சிலர் ரசிகர்கள் போர்வையில் என் அருகில் வந்து செல்பி எடுப்பதுபோல் உடம்பை தொட்டு தவறாக நடக்கின்றனர்.

தோளிலும் கை வைக்கிறார்கள். இது எனக்கு எரிச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் பர்தா அணிந்து கொண்டு செல்கிறேன்.”

இவ்வாறு நமிதா பிரமோத் கூறினார்.


Next Story