நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் நவ்யா நாயர்


நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் நவ்யா நாயர்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:45 PM GMT (Updated: 16 Jan 2020 5:30 PM GMT)

தமிழில் அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சில நேரங்களில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.

2010-ல் சந்தோஷ் மேனன் என்ற தொழில் அதிபரை மணந்து மும்பையில் குடியேறினார் நவ்யா நாயர். அதன்பிறகு தமிழ், மலையாள படங்களில் நடிக்கவில்லை. இவருக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். 

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நவ்யா நாயர் மலையாள படமொன்றில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த படத்துக்கு தீ என்று பெயர் வைத்துள்ளனர். வி.கே.பிரகாஷ் இயக்குகிறார்.

படத்தில் நவ்யா நாயர் என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்பதை படக்குழுவினர் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராவதாக தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் மம்முட்டி, நடிகை மஞ்சுவாரியர் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

மீண்டும் நடிப்பது குறித்து நவ்யா நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில் எனது புதிய கனவு. என் திரைப்படம், உங்களுக்கும் எனக்கும் இருக்கிற அனல், அன்பு, மகிழ்ச்சி, அமைதி என்று பதிவிட்டுள்ளார். நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். விரைவில் தமிழ் படத்திலும் நடிப்பார் என்று தெரிகிறது.

Next Story