அஜித் பட வாய்ப்பை இழந்தேன் நடிகர் பிரசன்னா வருத்தம்


அஜித் பட வாய்ப்பை இழந்தேன் நடிகர் பிரசன்னா வருத்தம்
x
தினத்தந்தி 22 Jan 2020 10:30 PM GMT (Updated: 22 Jan 2020 6:23 PM GMT)

அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டதாக பிரசன்னா தெரிவித்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துள்ளது. அஜித் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, யாமிகவுதம், இலியானா ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. தற்போது கியூமா குரோஷியை தேர்வு செய்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் வலிமை படத்தில் பிரசன்னா வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

வலிமையில் நடிக்கிறீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்றார். இந்த நிலையில் அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டதாக பிரசன்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

“அஜித்தின் வலிமை படத்தில் நான் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. நானும் அந்த படத்தில் நடிக்க ஆவலுடன் இருந்தேன். எனது வாழ்க்கையில் பெரிய அறிவிப்பை வெளியிடும் நம்பிக்கையில் காத்திருந்தேன். ஆனால்  துரதிர்ஷ்டவசமாக அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு அமையாமல் போய்விட்டது.

இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இரண்டாவது வாய்ப்பு எப்போதும் உண்டு. விரைவில் அஜித்துடன் நடிப்பேன்.”

இவ்வாறு பிரசன்னா கூறியுள்ளார்.

Next Story