‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா


‘மாநாடு’ படத்தில்   சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா
x
தினத்தந்தி 5 Feb 2020 10:45 PM GMT (Updated: 5 Feb 2020 9:10 PM GMT)

மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படம் பற்றிய அறிவிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெளியிட்டனர். ஆனால் படத்தில் நடிக்க சிம்பு காலதாமதம் செய்ததால் படத்தை கைவிடுவதாகவும், வேறு நடிகரை வைத்து புதிய பரிமாணத்தோடு மாநாடு படம் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

இதையடுத்து மகா மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார் என்று அவரது தரப்பில் அறிவிப்பு வெளியானது. இந்த மோதலை தீர்க்க தயாரிப்பாளர் சங்கம் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது மாநாடு படத்தில் சிம்பு நடிக்க தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநாடு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும், முக்கிய கதாபாத்திரங்களில் டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரும் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜாவின் மகன் மனோஜ், டேனியல், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் மாநாடு படத்தில் நடிப்பதாக தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மாநாடு படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்தசாமியிடம் பேசி வந்தனர். ஆனால் அவர் நடிக்கவில்லை. அரவிந்தசாமிக்கு பதிலாக வில்லன் வேடத்துக்கு எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்துள்ளனர்.

மாநாடு படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் நடிப்பதாகவும் அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.

Next Story