நடிகர் யோகிபாபு திருமணம் குலதெய்வம் கோவிலில் நடந்தது


நடிகர் யோகிபாபு திருமணம்   குலதெய்வம் கோவிலில் நடந்தது
x
தினத்தந்தி 5 Feb 2020 11:30 PM GMT (Updated: 5 Feb 2020 9:25 PM GMT)

நடிகர் யோகிபாபு திருமணம் அவரது குல தெய்வ கோவிலில் நேற்று காலை நடந்தது.

அமீர் இயக்கிய யோகி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான யோகிபாபு ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடிக்கும் அளவுக்கு முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். வேலாயுதம், வீரம், வேதாளம், ரெமோ, மெர்சல், சர்கார், மிஸ்டர் லோக்கல், கோமாளி, அயோக்கியா, கோலமாவு கோகிலா, விஸ்வாசம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது 15-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு யோகிபாபுவுக்கு திருமணம் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியானது. துணை நடிகை ஒருவருடன் யோகிபாபு இருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலானது.

அந்த பெண்ணுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று யோகிபாபு விளக்கம் அளித்தார். பின்னர் யோகிபாபுக்கு பெற்றோர் பெண் பார்த்து நிச்சயம் செய்துள்ளதாகவும், திருத்தணி கோவிலில் திருமணம் நடக்க உள்ளது என்றும் இன்னொரு தகவல் வெளியானது. இதனை டுவிட்டரில் யோகிபாபு மறுத்தார்.

இந்த நிலையில் யோகிபாபு திருமணம் ஆரணி அருகே வாழப்பந்தல் கிராமத்தில் உள்ள தனது குல தெய்வமான பச்சையம்மன் கோவிலில் நேற்று காலை நடந்தது. மணமகள் பெயர் மஞ்சு பார்கவி. நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மஞ்சு பார்கவிக்கு யோகிபாபு தாலி கட்டினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடக்கிறது. யோகிபாபுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story